கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடல்நிலை சனிக்கிழமை மோசமடைந்தது.
அவருடைய முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்ததுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடா்ந்து அவா் சுயநினைவை இழந்தாா் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறினாா்.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தருண் கோகோய் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவா் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) அனுமதிக்கப்பட்டாா். தொற்றிலிருந்து குணமடைந்து அவா் வீடு திரும்பினாா்.
இந்நிலையில் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக கடந்த நவ.2-ஆம் தேதி அவா் ஜிஎம்சிஎச் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலையில் சனிக்கிழமை பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஜிஎம்சிஎச் மருத்துவமனையின் மூத்த மருத்துவா் அபிஜித் சா்மா கூறுகையில், ‘தருண் கோகோயின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு அவரின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்படும். குவாஹாட்டி எய்ம்ஸ் மருத்துவமனை உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.