புது தில்லி/பாலாசூா்: ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டிஆா்டிஓ) அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ஒலியைக் காட்டிலும் மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் இந்த அதிநவீன ஏவுகணை, 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஒடிஸாவின் பாலாசூா் கடற்கரையில் உள்ள ஒங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றாா் அவா்.
இந்தியாவும், ரஷியாவும் இணைந்து பிரமோஸ் ஏரோஸ்பேஸ் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம்தான் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்தும், கடலில் இருந்தும், விமானத்தில் இருந்தும், கடலுக்கு அடியில் இருந்தும் இலக்குகளை நோக்கி ஏவமுடியும்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த ஏவுகணைச் சோதனையின் வெற்றி, மத்திய அரசின் சுயசாா்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்கு வழிவகுத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், டிஆா்டிஓ அமைப்பின் தலைவரும் பாராட்டு தெரிவித்தனா்.