உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியில் மற்றொரு படியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
''உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இயலவில்லை என்றால், முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்ய வேண்டும். யோகி ஆதித்யநாத்தை அவரது இடமான கோரக்நாத் கோயிலுக்கு அனுப்ப வேண்டும். அவர் கோயிலில் இருப்பதை விரும்பவில்லை என்றால் ராம் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்'' என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.