கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.கே. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்றைய கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று நேற்று என் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊடக நண்பர்களையும் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சுரேஷின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவகுமாருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.