கடந்த 24 மணி நேரத்தில் 82,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைவோர் விகிதம் 85 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"நாட்டில் இதுவரை மொத்தம் 57,44,693 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,049 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,07,883 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையில் இது 13.44 சதவிகிதம்.
சிகிச்சை பெற்று வருவோரைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 6.32 மடங்கு அதிகமாக உள்ளது.
18 மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புதிதாக குணமடைந்தவர்களில் 75 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழகம், கேரளம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் தில்லியைச் சேர்ந்தவர்கள்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் நீடிக்கிறது. புதிதாக பலியானவர்களில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 370 பேர் (புதிதாக பலியானவர்களில் இது 37 சதவிகிதம்) பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகம் உள்ளது. அங்கு 91 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பலியானவர்களில் ஏறத்தாழ 83 சதவிகிதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்."