வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் பல முடங்கியுள்ள நிலையில், தனிநபர்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள் வட்டி விதித்தன.
வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்த நிலையில் மத்திய அரசு கடந்த விசாரணையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ரூ. 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், சிறு, குறு, தொழில் கடன், கிரெட்டில் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய விசாரணையில், வட்டிக்கு வட்டி வசூல் தள்ளுபடி முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது தற்போதைய சூழ்நிலையில் நியாயமில்லை என்றும் முடிவை உடனடியாக அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே வங்கிகள் இதனை அமல்படுத்த தொடங்கி விட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வழக்கின் விசாரணை அக்டோபர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.