புது தில்லி: பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக்தாந்திரிக் ஜனதா தளம் (எல்ஜேடி) கட்சியின் தலைவர் சரத் யாதவின் மகளான சுபாஷிணி யாதவ், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த (எல்ஜேபி) முன்னாள் எம்.பி. காளி பாண்டே ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.
பிகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட பேரவைக்கு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், லோக்தாந்திரிக் ஜனதா தளம் (எல்ஜேடி) கட்சியின் தலைவர் சரத் யாதவின் மகளும் சமூக சேவகருமான சுபாஷிணி யாதவ், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. காளி பாண்டே ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.
இதுகுறித்து, சுபாஷிணி யாதவ் கூறும்போது, "எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
பிகார் தேர்தலில் எப்போதும் "மகாகத்பந்தன்' (மெகா கூட்டணி) போட்டியை சரத் யாதவ் முன்னெடுப்பார். உடல்நலக் குறைவு காரணமாக இத்தேர்தலில் அவர் தீவிரமாக பங்கேற்கவில்லை. எனவே, அவரது பொறுப்பை நான் முன்னெடுத்து, பிகாரை அதிக உயரத்துக்கு கொண்டுசெல்வேன்' என்றார்.
முன்னாள் எம்.பி. காளி பாண்டே கூறும்போது, "1984ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மக்களவை உறுப்பினராக இருந்தபோது அவருக்கு ஆதரவு வழங்கினேன். இப்போது காங்கிரஸில் இணைந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இது எனது பழைய வீடு. எனது பழைய வீட்டுக்குத் திரும்பி வருவதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
சுபாஷிணி யாதவ், காளி பாண்டே ஆகியோரை காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் மதன் மோகன் ஜா, ஏஐசிசி செயலர் தேவேந்திர யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.