தெலங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்எல்ஏ மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கனமழையால் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம்பட்டணம் தொகுதி எம்.எல்.ஏ. மன்சிரெட்டி நேற்று சென்று இருந்தார். அப்போது மடிப்பள்ளி என்ற இடத்தில் எம்.எல்.ஏ. மன்சிரெட்டியை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
மேலும் தங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறியும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து எம்.எல்.ஏ மீது காலணியை வீசியதோடு, அவரது வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர், பொதுமக்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.