ஒடிசா: இடைத்தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா கவச உடை அவசியம்
ஒடிசாவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு பணியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், கரோனா தடுப்பு பெட்டகத்தையும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவில் நவம்பர் 3-ஆம் தேதி இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் ஒடிசாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடத்தப்படுகிறது.
அந்தவகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட மற்ற உபகரணங்களுடன் வாக்குப்பதிவு பணியாளர்கள் கரோனா தடுப்புப் பெட்டகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி தலைமையில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தேர்தல் பணியாளர்களுக்கு வாக்குச்சாவடிகளை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கவச உடை உள்ளிட்டவை அடங்கிய கரோனா தடுப்பு பெட்டகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.