தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளாலேயே இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தில்லியில் இருந்தவாறே காணொலி வாயிலாக ஆந்திர மாநிலத்திற்கான சாலை மேம்பாட்டுத்திட்டங்களை அமைச்சர் நிதின் கட்காரி தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, ''ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் கூறினார்.
மக்களின் உயிரைக் காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு அரசு அனைத்து வகையிலான உதவிகளையும் செய்யும் என்பதை தனிப்பட்ட முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பெருமளவு சாலைவிபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சிறந்த முயற்சியால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று அமைச்சர் கூறினார்.