பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக பதவியேற்றால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா பகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினர்.
இதில் பேசிய ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், ''நான் முதலமைச்சராக பதவியேற்றால் என்னுடைய முதல் கையெழுத்து 10 லட்சம் அரசு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக மட்டுமே இருக்கும்.
பிகாருக்கு வருகைப் புரிந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறோம். ஆனால் பிகார் மாநிலத்திற்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்.'' என்றார்.
மேலும், ''தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு பிரதமர் பதில் தர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
''கடல் இல்லாத நிலைஹில் முழுவதும் நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளதால் பிகாரில் தொழிற்சாலைகளை அதிக அளவில் நிறுவ இயலவில்லை என்று நிதிஷ்குமார் கூறுகிறார். ஆனால் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணாவில் உள்ள ஆலைகளுக்கு பிகார் மக்கள் வேலைக்காக செல்கின்றனர்'' என்று விமர்சித்தார்.