புதுதில்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 20 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியை குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜே.என்,யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் மாணவர் ஷர்ஜீல் இமாம் கடந்த மாதம் 13-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக உமர் காலித் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக "நான் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. என்னை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது நடைமுறையில் ஒரு தனிமைச் சிறைவாசம் ”என்று காலித் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத்திடம் தெரிவித்திருந்தார்.
உமர் காலித்தின் வாதத்தை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் திஹார் சிறை கண்காணிப்பாளரிடம் காலித்தை மற்ற கைதிகளுக்கு இணையாக நடத்துமாறு கேட்டுக் கொண்டது.
முன்னதாக தில்லி காவல்துறை இருவரின் நீதிமன்றக் காவலை 30 நாட்களுக்கு நீட்டிக்க கோரியது.
தொடர்ந்து தில்லி நீதிமன்றம் முன்னாள் ஜே.என்.யூ மாணவரான உமர் காலித் மற்றும் ஜே.என்.யூ முனைவர் மாணவர் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் நீதிமன்றக் காவலை 2020 நவம்பர் 20 வரை நீட்டித்து உத்தரவிட்டது.