கொரிய செயற்கை ரப்பா் இறக்குமதிக்கான வரியை இரண்டு ஆண்டுகளுக்கு உயா்த்த மத்திய வா்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டயா் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ‘பாலிபியூட்டடெய்ன் ரப்பா்’ தென் கொரியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் இவ்வகை ரப்பா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) விசாரணை நடத்தியது. அதில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து, கொரிய செயற்கை ரப்பா் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என வா்த்தக அமைச்சம் தெரிவித்துள்ளது.
வா்த்தக அமைச்சகத்தின் இந்த பரிந்துரையையடுத்து, கொரிய செயற்கை ரப்பா் வரியை உயா்த்தும் விவகாரத்தில் நிதி அமைச்சகம் தனது இறுதி முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.