நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக அக். 28-இல் 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது; இரண்டாம் கட்டமாக நவ. 3-இல் 94 தொகுதிகளுக்கும் 3-ஆம் கட்டமாக நவ. 7-இல் 78 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும்.
இந்தத் தேர்தலைப் பொருத்த வரையிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, விகாஸ் ஷீல் இன்சான் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன; எதிர்த்தரப்பில் போட்டியிடும் மகா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், இடதுசாரி கட்சிகள் உள்ளன. மூன்றாவது போட்டியாளராக, மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி உள்ளது. இவ்வாறாக மும்முனைப் போட்டியில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இதில், லோக் ஜனசக்தி கட்சி, பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 110 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மாறாக, தற்போதைய முதல்வர் நிதீஷ் குமார் மீதான அதிருப்தி காரணமாகவும், குறைந்த தொகுதிகளை அளித்ததாலும், கூட்டணியில் இருந்து வெளியேறி லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் 115 தொகுதிகள் உள்பட 134 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது லோக் ஜனசக்தி.
2015-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி நிலவரம்
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜவாதி ஜனதா ஆகிய கட்சிகள் கொண்ட மகா கூட்டணி ஓரணியிலும், பாஜக தலைமையில் லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றொரு அணியிலும் இருந்து தேர்தலை எதிர்கொண்டன.
கடந்த தேர்தலின் முடிவில், ஐக்கிய ஜனதாதளம்- 71 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதாதளம்- 80, பாஜக- 53, காங்கிரஸ்- 27, லோக் ஜனசக்தி-2, ஆர்எல்எஸ்பி-2, எச்ஏஎம்-1, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி-3, சுயேச்சைகள்-4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தொடக்கத்தில் ஐக்கிய ஜனதாதளமும் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சியைக் கைப்பற்றின. நிதீஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைச்சரவை சில மாதங்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது.
துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து நிதீஷ் குமாருக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்ததால், ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடனான உறவை நிதீஷ் குமார் முறித்துக் கொண்டார். இதையடுத்து, நிதீஷ்குமார் முதல்வராக நீடிக்க பாஜக ஆதரவளிக்க முன் வந்தது.
இதையடுத்து, பாஜகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்தி நிதீஷ் குமார் முதல்வராகவும், பாஜகவின் சுஷீல் மோடி துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்தப் புதிய கூட்டணியே எஞ்சியிருந்த ஆண்டுகளுக்கும் நீடித்தது. 2020-ஆம் ஆண்டு வரை ஆட்சிக்காலம் முழுவதும் இந்தக் கூட்டணி வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டது.
2020-இல் வெற்றி யாருக்கு?
கடந்த 5 ஆண்டுகளாக நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த 5 ஆண்டுகளில் தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டு முதல்வர் நிதீஷ் குமார் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதால் பிகார் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், மீண்டும் ஆட்சிப் பொறுப்பு கிடைத்தால், மேலும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்றும் பிரசாரம் செய்து வருகிறார்.
நிதீஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா செய்த தேர்தல் பிரசாரத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி அலை ஏற்படுத்திய தாக்கத்தைப்போல, 2020-ஆம் ஆண்டு பிகாரில் தேஜஸ்வி அலை வீசுகிறது என்றும், இம்முறை ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கூறி வருகிறார்.
அதேசமயம், நிதீஷ் குமாருக்கு எதிராக களம் இறங்கியுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான், தான் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால், ஊழல் புகார்களுக்காக நிதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைப்பேன் என்று அதிரடி பிரசாரம் செய்து வருகிறார்.
தேஜஸ்வி யாதவின் பிரசாரத்தின்போது, பிகாரில் வறுமை தலை விரித்தாடுவதாகவும், மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிக்காக வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தராத நிதீஷ் குமாருக்கு ஏன் மீண்டும் முதல்வராக வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி பிரசாரம் செய்து வருகிறார்.
அதற்கு எதிராக, பிகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது நடைபெற்ற ஊழல்கள் குறித்து தேஜஸ்வி பேச மறுப்பது ஏன் என்று பாஜக எதிர்க் குற்றச்சாட்டுகளைக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மொத்தத்தில் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கும் நிலையில், பிகார் தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றப் போகிறவர்கள் யார் என்பது, வரும் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் தெரிய வரும்.
கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?
டைம்ஸ் நவ் தொûலக்காட்சி
சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்ûதய கருத்துக் கணிப்புகளின்படி கட்சிகளின் வெற்றி நிலவரம்
úதசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக 77
ஐக்கிய ஜனதாதளம் 63
கூட்டணி கட்சிகள் 7
மகா கூட்டணி
ராஷ்ட்ரீய ஜனதாதளம் 60
காங்கிரஸ் 16
இடது சாரி கட்சிகள் 11
இந்தியா டுúட-úலாக்நீதி சிஎஸ்டிஎஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கட்சிகளின் வெற்றி நிலவரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
133 - 143
இடங்கள்
மகா கூட்டணி
88 - 98 இடங்கள்
இதர கட்சிகள்
7 இடங்கள்
கட்சிவாரியாக போட்டியிடும் தொகுதிகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக 110
ஐக்கிய ஜனதாதளம் 115
ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 7
விகாஸ் ஷீல் இன்சான் 11
மகா கூட்டணி
ராஷ்ட்ரீய ஜனதாதளம் 144
காங்கிரஸ் 70
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 19
இந்திய கம்யூனிஸ்ட் 6
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4
லோக் ஜன சக்தி
லோக் ஜன சக்தி 134
பாஜக வேட்பாளர்களுக்கு லோக் ஜனசக்தி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.