இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்கா- இந்தியா உத்திகள் வகுத்தல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மூன்றாவது தலைமைத்துவ மாநாட்டில் பேசிய மோடி இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் பிரதமர் மோடி தனது உரையில் மிகவிரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால் இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “2020ஆம் ஆண்டு தொடங்கியபோது இந்த ஆண்டு இப்படி இருக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நாட்டில் கரோனா பேரிடர் காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்தியாவில் மிகக்குறைந்த காலத்தில் மருத்துவக் கட்டமைப்பு மிகவிரைவாக மேம்படுத்தப்பட்டது. இதனால் கரோனாவால் குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.” என்றார்.
“நம்மை சூழ்ந்திருக்கும் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை நமக்கு புதிய சிந்தனைகளையும், புதிய வாய்ப்புகளையும் வழங்கி இருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.நடப்பாண்டு மட்டும் 200 கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது. இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாளை வளமிக்க தற்சார்பு இந்தியா உருவாகும்.” என தன்னுடைய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.