நாட்டில் கரோனா பாதிப்பில் 62 சதவிகிதத்தை 5 மாநிலங்கள் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக அளவு கரோனா வைரஸ் பாதிப்புகள் ஐந்து மாநிலங்களில் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாட்டின் 62 சதவீத கரோனா பாதிப்புகள் உள்ளன என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் “10 லட்சம் மக்கள்தொகைக்கு பிரேசில் 28,000 கரோனா பாதிப்புகளைப் பதிவு செய்கிறது. அதே நேரத்தில் இந்தியா 10 லட்சம் மக்கள்தொகைக்கு 2,000 பாதிப்புகளைப் பதிவு செய்கிறது.” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இதனை மக்கள்தொகையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்தியாவில் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 883 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.