ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யலாம் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் கோயில் தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பதி கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், கோயில் சொத்துகளை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
5 ஆண்டு கால திருப்பதி கோயில் சொத்துகள் மற்றும் வரவு - செலவு கணக்கை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆந்திர அரசு, மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரிடம் வழங்க உள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானம் இது குறித்து நிறைவேற்றிய 202 பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம், ஏழுமலையானுக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் வரவு - செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கை நிறைவேற்றப்பட இருப்பதால், "வேலை முடிந்தது" என்று அவர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.