கேரளத்தில் கரோனா பாதித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்போது அவசர ஊர்தி ஓட்டுநரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணை அவசர ஊர்தி ஓட்டுநரான நோவல்(29) மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது அவர் கரோனா பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தாயின் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததாகவும், குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.
அவசர ஊர்தி ஓட்டுநரான நோவல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் நேற்று (சனிக்கிழமை)
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்போது தனியாக பெண்ணை அழைத்துச் சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசிய பெண்கள் ஆணையத் தலைவர் எம்.சி.ஜோஸ்பின், ''இது பெண் நோயாளிகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை தேவை என்பதை காட்டுகிறது. குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதை போன்று, அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். ஓட்டுநரை நியமிப்பதற்கு முன்பு அவரது பின்புலங்களை ஆராய்ந்து பணியமர்த்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.
கரோனா பாதித்த பெண்ணை அவசர ஊர்தி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.