கேரளத்தில் நடைபெற உள்ள காலியான இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் காலியாக உள்ள குட்டநாடு மற்றும் சவரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கரோனா பாதிப்பிற்கு மத்தியில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கேரள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
“நவம்பரில் இடைத்தேர்தல் நடத்தினால் நேரமும் பணமும் வீணாகும். மேலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாக்குப்பதிவும் மிகக் குறைவாகவே இருக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் கருத்துடன் ஆளும் இடது முன்னணி அரசும் உடன்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.