புது தில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதமாக அளிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இபிஎஃப்ஓ அமைப்பின் அறங்காவலர்கள் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்புத் தொகைக்கு (2019-20-ஆம் ஆண்டுக்கான தொகை) 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், 8.15 சதவீத வட்டியை உடனடியாகவும், எஞ்சிய 0.35 சதவீத வட்டியை வரும் டிசம்பரிலும் வழங்க முடிவு செய்யப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில், இபிஎஃப்ஓ அறங்காவலர்கள் வாரியக் குழுக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 2019-20-ஆண்டுக்கான பி.எஃப். வைப்புத்தொகைக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த வட்டியை ஏற்கெனவே வழங்க இபிஎஃப்ஓ திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் வட்டியை வழங்க இயலவில்லை.