சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் இணையவழி விற்பனை வசதி: பிரதமர் மோடி

சாலையோர உணவக வியாபாரிகளும் உணவு வகைகளை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் அவர்களுக்காக புதிய இணையதளம் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர்
காணொலி முறையில் சாலையோர வியாபாரியிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.
காணொலி முறையில் சாலையோர வியாபாரியிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.


போபால்/புது தில்லி: சாலையோர உணவக வியாபாரிகளும் உணவு வகைகளை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் அவர்களுக்காக புதிய இணையதளம் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
கரோனா தொற்று காலத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது. அந்தத் திட்டத்தின் கீழ் பலனடைந்த மத்திய பிரதேச மாநில சாலையோர வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் புதன்கிழமை கலந்துரையாடினார்.  அப்போது, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: 
மத்திய பிரதேசத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான சுயச்சார்பு கடனுதவி திட்டத்தின் கீழ் பயன்பெறுவற்காக, கடந்த 2 மாதங்களில் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்திய மத்திய பிரதேச அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 
சாலையோர உணவக வியாபாரிகளுக்காக புதிய இணையதளம் தொடங்குவதற்கான திட்டம் தயாராகி வருகிறது. அந்த இணையதளம் மூலம், பெரிய உணவகங்களைப் போல் சாலையோர உணவகங்களும் வீடுகளுக்கே சென்று உணவு வகைகளை விநியோகிக்க முடியும். இந்தத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 
இதேபோன்று சாலையோர வியாபாரிகளும் இணையவழி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதற்காக, வங்கிகளும் இணையவழி சேவை அளிப்பவர்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 
சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெறும்போது வட்டியில் 7 சதவீத தள்ளுபடி கிடைக்கும். கடன் தவணையை தவறாமல் திருப்பிச் செலுத்தினால் அடுத்த முறை கூடுதலாகக் கடன் பெறலாம் என்றார் பிரதமர் மோடி. 
முன்னதாக, இந்தூர், குவாலியர், ராய்சின் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடம் இலவச சமையல் எரிவாயு திட்டம், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களின் மூலம் அவர்கள் பயனடைந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com