ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை 35 சதவிகித குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் கடந்த ஆண்டு அதிக அளவிலான குற்றச்சம்பவங்கள் பதிவான நிலையில், நடப்பாண்டில் குறைந்த அளவே பதிவாகியுள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 3,532 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5,450 குற்றச்சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
ஆண்டில் ஒவ்வொரு 8 மாதத்திற்கு இடையிலான இடைவெளியில் குற்றச்சம்பவங்கள் குறித்து கணக்கெடுக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு கரோனாவால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
குற்றச் சம்பவங்களாக கொலை, கடத்தல், வரதட்சனைக் கொடுமை, நகைப்பறிப்பு, திருட்டு, வாகனத் திருட்டு, ஏமாற்றுதல், கொள்ளை, துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
கரோனா தொற்று அச்சுறுத்தலால் ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததே குற்றச்சம்பவங்கள் குறைந்ததற்காக முக்கிய காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கின்போது மற்ற குற்றச்சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் சைபர் குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.