நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வினையொட்டி, செப்டம்பர் 12 ஆம் தேதி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் திரும்பப் பெறப்படுவதாகக் கூறியுள்ளார்.
'வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் என்ற அடிப்படையில் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மேற்குவங்கத்தில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் ஆர்வத்தை மனதில் வைத்து, செப்டம்பர் 12 ஆம் தேதி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் திரும்பப் பெறப்படுகிறது.
இதனால் மாணவர்கள் 13 ஆம் தேதி எந்தவித அச்சமும் கவலையும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதலாம்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், செப்டம்பர் 12 ம் தேதி முழு பொதுமுடக்கத்தை ரத்து செய்யுமாறு மாணவர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.