கொல்கத்தாவில் கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பேருந்து, ரயில், விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவையை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி மெட்ரோ பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு முன் பயணிகளுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 400 பயணிகள் வரை மெட்ரோ ரயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது என அறிவித்துள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது.