மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மத்தியபிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததால் காங்கிரஸின் கமல் நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. முன்னதாக 25 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்ததையடுத்து மத்திய பிரதேசத்தில் 27 இடங்கள் காலியானவையாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.