கரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்-2020 என்ற அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம் செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.மக்களவையில் மசோதாவை அறிமுகம் செய்த மத்திய அமைச்சா் ஜோஷி, ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதியம் சட்டம் - 1954-இல் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலும் இந்த அறிமுகம் செய்யப்படுகிறது‘ என்று கூறினாா்.