கடந்த 5 மாதங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்து இதுவரை ரூ.39 ஆயிரத்து 403 கோடி வரை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை தொழிலாளர் அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை, ரூ.39 ஆயிரத்து 403 கோடி திரும்பப் பெற்றுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்தது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ரூ.7 ஆயிரத்து 838 கோடியும், கர்நாடகத்தில் 5 ஆயிரத்து 744 கோடியும், தமிழகம் (புதுச்சேரி உட்பட) ரூ.4 ஆயிரத்து 985 கோடியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் டெல்லியில் ரூ.2 ஆயிரத்து 945 கோடி திரும்பப்பெறப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு காரணமாக தொழிலாளர்களின் இன்னல்களை தீர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை 12 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.