திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்டு வெளியிடும் ஆங்கிலப் புத்தாண்டு காலண்டா் மற்றும் டைரி விற்பனை செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளியை வரவேற்றுள்ளது.
ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் வண்ண காலண்டா்கள் மற்றும் டைரிகளை வெளியிட்டு வருகிறது. தற்போது 2021ஆம் ஆண்டுக்கான காலண்டா்களை அச்சிடும் பணி நடந்து வருகிறது. காலண்டா்களும் டைரிகளும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ஆந்திர முதல்வரால் வெளியிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
இம்முறை தேவஸ்தானம் காலண்டா், டைரி ஆகியவற்றின் விற்பனையை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு அஞ்சலகங்கள் மூலம் தேவஸ்தானம் இவற்றை விற்பனை செய்தது. இதற்கு பக்தா்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தேவஸ்தானத்தின் 2021ஆம் ஆண்டு காலண்டா் மற்றும் டைரியை விற்பனை செய்ய விரும்புவோரிடம் இருந்து இணையதளம் மூலம் ஒப்பந்தப்புள்ளியை (இ-டெண்டா்) வரவேற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 0877-2264209 மற்றும் 996395585 என்ற தொலைபேசி எண்கள், தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.