கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்காக 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கங்வார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கங்வார் பேசியதாவது, கரோனா பெருந்தொற்றால் பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கில் வேலையிழந்த 2 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு 5,000 கோடி ரூபாய் நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர ஊரடங்கில் ஊதியமின்றி தவித்து வந்த 2 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைச்சர் கங்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா ஊரடங்கில் தொழிலாளர் நலன் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பிற்காக முன்னோடியில்லாத பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் நலனில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடன் மாநில அரசுகள் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி கட்டடத் தொழிலாளர்களுக்கும், மற்ற தொழிலாளர்களுக்கும் செஸ் வரியிலிருந்து போதிய நிதியுதவியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதில் அதிக அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டடத் தொழிலாளர்களாக உள்ளதாக மதிப்பிடப்பட்டது.
ஊரடங்கில் 2 கோடி தொழிலாளர்களுக்கு செஸ் வரியிலிருந்து நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் இதுவரை 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புலம் பெயர் தொழிலாளர்களின் குறைகளை போக்கும் வகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 20 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 15,000 புகார்கள் பெறப்படு அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர் நலட்சட்டத்தின்படி, வெளிமாநில தொழிலாளர்களின் பதிவுகளைமாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கரோனாவால் உருவான அசாதாரன சூழலால் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பதிவு செய்யும் பணியினை மேற்கொண்டது.