புது தில்லி: கலைத்துறை அறிஞரும், கல்வியாளருமான கபிலா வாத்ஸ்யாயன் தில்லியில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிறுவன இயக்குநரான அவர், கடந்த 2011-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது அளித்து கெளரவிக்கப்பட்டார்.
மாநிலங்களவை நியமன எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். வரலாறு, கட்டடக் கலை, இந்திய பாரம்பரிய நடனம் ஆகியவற்றில் அறிஞராக திகழ்ந்த அவர், தில்லியில் பிறந்தவர். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவுக்கு சென்றும் கல்வி பயின்றார். கலைகள் மற்றும் அதன் வரலாறு தொடர்பாக 20 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார்.