அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் 28 ராணுவ வீரர்கள் உள்பட புதிதாக 183 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்றுபரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் வடகிழக்கு மாநிலமான அருணாசலிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 183 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7,005-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ராணுவ வீரர்களும், 4 அசாம் ரைபில் பிரிவு வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாசலில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில புலனாய்வு அதிகாரிகளும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து 171 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைவோர் விகிதம் 72.89 சதவிகிதமாக உள்ளது.
அருணாசலில் கரோனா தொற்றிலிருந்து இதுவரை 5106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக உள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.