விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும்வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை எனும் பேச்சுக்கே இடமில்லை என சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், தற்போதைய நிலையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கம் வகிப்பது குறித்து விவாதிக்க கட்சியின் முக்கிய குழு விரைவில் கூடும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் “விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை எனும் பேச்சுக்கே இடமில்லை. இந்த விசயத்தில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்போம்.” என சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறிய நிலையில் சுக்பீர் சிங் பாதலின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.