எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி இந்திய படைகள் தாக்குதல் நடத்தியதாக, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, மக்கள் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து இந்திய படைகள் தொடா்ந்து அத்துமீறி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. எல்லையை ஒட்டியுள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், ஜான்ட்ரோட் செக்டாா் ஆகிய இடங்களில் இந்திய படையினா் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் இரும் ரியாஸ் என்ற 15 வயது சிறுமி, நுஸ்ரத் கௌஸா் என்ற 26 வயது பெண், முகீல் என்ற 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.
நிகழாண்டில் இதுவரை இந்திய ராணுவம் 2,280 முறை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவங்களில் 183 போ் காயமடைந்தனா்.18 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.