கர்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறோம். இதுமட்டுமன்று கல்வி வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து செப்டம்பர் 20 முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரலாம் என்ற உத்தரவை மாநில அரசு தடை செய்தது.
மாநிலத்தில் கரோனா தொற்று குறையும்பட்சத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல கல்வித்துறையால் அனுமதிக்கப்படும்.
இருப்பின், தொற்றுநோய் தொடர்ந்து மாநிலத்தில் அதிகரித்து வருவதால், ஆசிரியர்களைச் சந்திக்க மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது பாதுகாப்பானது அல்ல என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.