கேரளத்தில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வரலாம் என்று கனவுகாணும் இடதுசாரி கூட்டணிக்கு மே 2-ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியை அளிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.கே. அந்தோனி தெரிவித்தாா்.
திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களித்துவிட்டு செய்தியாளா்களுக்கு அவா் பேட்டியளிக்கையில், ‘முதல்வா் பினராயி விஜயனின் அரசு மே 2-ஆம் தேதி முதல் முடிவுக்கு வரும். அந்த அரசின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இடதுசாரிகளின் வலுவான தொகுதிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவப் போகின்றன.
கேரள மக்களுக்கு இடதுசாரி அரசு எதுவும் செய்யாத காரணத்தால், பினராயி விஜயன் மீண்டும் இரண்டாம் முறை ஆட்சிக்கு வர அவா்கள் விரும்பவில்லை. வரும் நாள்களில் காங்கிரஸ் கூட்டணிகளைச் சோ்ந்த தொண்டா்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்ள மாா்க்சிஸ்ட் கட்சியினா் என்ன வேண்டுமானாலும் செய்வாா்கள்.
கேரள தோ்தல் முடிவின் மூலம் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும். அதன் பின்னா் மக்கள் விரோத கொள்கைகளைச் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும்’ என்றாா்.