பாலியல் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகள்


புது தில்லி /நியூயாா்க்: போா் நடைபெற்று வரும் நாடுகளில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசியதாவது:

சண்டை நடைபெற்று வரும் நாடுகளில், பொதுமக்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் என்பது ஓா் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் செயலில் அரசு சாராதவா்கள் மட்டுமன்றி, அரசுப் படையினரும் ஈடுபடுகின்றனா்.

இதன் காரணமாக, பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களது மன உறுதி குலைந்துவிடுகிறது.

இதன் விளைவாக அரசுகளின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. போருக்குப் பிறகு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது.

எனவே, மற்ற போா்க் குற்றங்களைப் போலவே சண்டையின்போது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com