மும்பை: தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) தலைவா் சரத் பவாா் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் நவாப் மாலிக் கூறியதாவது:
80 வயதாகும் சரத் பவாா், பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு திங்கள்கிழமை லேப்ராஸ்கோபி முறையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்பட்டது. இரண்டு நாள் கண்காணிப்புக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை அவா் வீடு திரும்பினாா். இன்னும் சில தினங்களுக்கு அவா் வீட்டிலேயே ஓய்வெடுப்பாா் என்றாா் நவாப் மாலிக்.
சரத் பவாருக்கு முன்னதாக அதே மருத்துவமனையில் பித்தப் பையில் இருந்த கல் என்டோஸ்கோப்பி முறையில் அகற்றப்பட்டது.