மும்பை: உலகின் 10-ஆவது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பிரியங்கா மோஹிதே. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் அவர்.
இமய மலைத் தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ள சிகரம் அன்னபூர்ணா. இது 8,091 மீட்டர் உயரம் கொண்டது. ஏறுவதற்கு மிகக் கடினமான மலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
உலகின் 10-ஆவது மிக உயர்ந்த மலைச் சிகரமான அன்னபூர்ணாவின் உச்சியை ஏப்ரல் 16-ஆம் தேதி பிற்கல் 1.30 மணிக்கு அடைந்து சாதனை படைத்துள்ளார் பிரியங்கா மோஹிதே. மேற்கு மகாராஷ்டிரத்தின் சதாரா பகுதியைச் சேர்ந்த அவர், மருந்து உற்பத்தி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2013-இல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திலும் (8,849 மீட்டர்), 2018-இல் லோட்úஸ சிகரத்திலும்(8,516 மீட்டர்), 2016-இல் மக்காலு சிகரம் (8,485 மீட்டர்), கிளிமஞ்சாரோ சிகரம் (5,895 மீட்டர்) ஆகியவற்றிலும் பிரியங்கா ஏறியுள்ளார்.
கடந்த 2017-2018இல் சாகச விளையாட்டுகளுக்காக மகாராஷ்டிர அரசின் "சிவ சத்ரபதி' விருது பெற்றுள்ளார் பிரியங்கா.
"சிறு வயதிலிருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர் பிரியங்கா. மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள சஹ்யாத்ரி மலைத்தொடர் பகுதியில், இளவயதில் மலை ஏறுதலைத் தொடங்கினார். மேலும் 2012-ஆம் ஆண்டில் உத்தரகண்டில் உள்ள இமயமலையின் கர்வால் தொடரில் பந்தர்பஞ்ச் மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்' என அவரது சகோதரர் ஆகாஷ் மோஹிதே பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.