புது தில்லி: நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் முதல் அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக இருப்பது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த ஒப்பீடு புள்ளிவிவரத்தை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:
நாடு முழுவதும் 146 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. மேலும் 274 மாவட்டங்களில் 5 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
கரோனா முதல் அலையின்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 முதல் 20 வயது வரை உடையவர்களின் விகிதம் 8.07 சதவீதமாக இருந்தது. கரோனா இரண்டாம் அலையில் இது 8.50 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதுபோல, முதல் அலையின்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 வயதினரின் விகிதம் 20.41 சதவீதமாக பதிவான நிலையில், இரண்டாம் அலையில் இது 19.35 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மேலும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ஏற்பட்ட பாதிப்பு முதல் அலையில் 67.5 சதவீதமாக பதிவான நிலையில், இப்போது 69.18 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
கரோனா முதல் அலையின்போது 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விகிதம் 4.03 சதவீதமாக இருந்தது. இப்போது 2.97 சதவீதமாக பதிவாகியுள்ளது.
முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை கரோனா மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், அதிக பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.