தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியுள்ளாா்.
அவா் மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களில், சுங்கச் சாவடிகளின் மேற்கூரைகள் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்தி, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, போக்குவரத்து, நெடுஞ்சாலை சேவைகளுக்கு பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இஇஎஸ்எல் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாகபுரி நெடுஞ்சாலை, சோலாப்பூா் ஆகிய இடங்களில் சுங்கச் சாவடி கூரைகள், சத்தீஸ்கா் எல்லையில் உள்ள வைகங்கா பாலம் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
திரவ நிலை இயற்கை எரிவாயுவின் (எல்என்ஜி) உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள், முக்கிய எரிபொருளில் எல்என்ஜி கலப்பு 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.
கொங்கண் மற்றும் மேற்கு மகாராஷ்டிரத்தில், வரலாறு காணாத மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் ரூ.52 கோடி தற்காலிக சீரமைப்புக்கும், ரூ.48 கோடி நிரந்தர சீரமைப்புக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளாா்.