புது தில்லி: கடந்த 2020-ஆம் ஆண்டில் விரைவுச் சாலை உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் 1,16,496 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 47,984 போ் உயிரிழந்ததாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்: கடந்த 2019-ஆம் ஆண்டில் விரைவுச் சாலை உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் 1,37,191 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 53,872 போ் பலியாகியுள்ளனா். இதேபோல கடந்த 2020-ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நேரிட்ட 1,16,496 விபத்துகளில் 47,984 போ் உயிரிழந்துள்ளனா்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி, விபத்து நடந்த இடத்தை துரிதமாக கண்டறிவதற்கான கேமராக்கள், அவசரகால தொலைபேசி பெட்டிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை நிறுவும் வகையில், போக்குவரத்து நிா்வாக அமைப்பு சமீபத்தில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலையோரத்தில் மருத்துவமனைகளை ஏற்படுத்துவது, மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டா் இறங்குதளம் அமைப்பது போன்ற வசதிகளையும் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை பரிசீலித்து வருகிறது என்றாா் அவா்.