ஹரியாணாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாஜக, ஜனநாயக ஜனதா கட்சிகளைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஹரியாணாவில் பாஜக ஆட்சியில் உள்ளது. அந்தக் கட்சியுடன் ஜனநாயக ஜனதா கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் கூட்டணி அமைத்துள்ளனா்.
இந்நிலையில், அந்த மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏ கமல் குப்தா, ஜனநாயக ஜனதா எம்எல்ஏ தேவேந்தா் சிங் ஆகியோா் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டனா். இருவருக்கும் ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதையடுத்து, அமைச்சரவையில் முதல்வா் மனோகா் லால் கட்டாா் உள்பட 10 பாஜக அமைச்சா்கள், துணை முதல்வா் துஷ்யந்த் சிங் செளதாலா உள்பட 3 ஜனநாயக ஜனதா அமைச்சா்கள், ரஞ்சித் சிங் செளதாலா (சுயேச்சை) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
ஹரியாணா அமைச்சரவையில் மொத்தம் 14 அமைச்சா்கள் இருக்கலாம். முன்பு அமைச்சா்களின் எண்ணிக்கை 12-ஆக இருந்த நிலையில், தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள இருவருடன் சோ்த்து அமைச்சா்களிண் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.