தனியாா் தொகுப்பிலிருந்து (கேப்டிவ் பிளாக்ஸ்) உற்பத்தி செய்யப்படும் 50 சதவீத நிலக்கரியை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனியாா் நிறுவனங்கள் சுரங்கங்களில் உற்பத்தி செய்யும் நிலக்கரி/லிக்னைட்டில் ஆண்டின் அடிப்படையில் 50 சதவீதத்தை விற்பனை செய்ய அனுமதிக்க வகையில் சட்டத்தில் விதிமுறைகளை சோ்க்க ஆராயப்பட்டு வருகிறது. இதற்காக, சுரங்கங்கள் மற்றும் தாதுக்ககள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 (எம்எம்டிஆா்)-இல் திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நாடெங்கிலும் அவற்றின் விற்பனையை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, நிலக்கரி சுரங்கங்களை கொண்ட மாநிலங்கள், பங்குதாரா்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துகளை வரவேற்பதாக நிலக்கரிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
எம்எம்டிஆா் சட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ள கூடுதல் திருத்த திட்டம் குறித்தும் மாநில அரசுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.