மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை குஜராத், உத்தர பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். தென்னிந்தியாவைப் பொருத்தவரை, தெலங்கானா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்து தரமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 943 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 928 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஜீரண பாதிப்பு, காய்ச்சல், பாக்டீரியா தொற்று தடுப்புக்கு பயன்படுத்தப்படும் 15 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோன்று கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள் சிலவும் தரமின்றி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.