உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள சாவர்க்கர் படத்தை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சாவர்க்கர் படத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் யாதவுக்கு காங்கிரஸ் கட்சியின் தீபக் சிங் எழுதியுள்ள கடிதத்தில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டது அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.
இதே போல் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலையாவதற்காக ஆங்கிலேயரிடம் எப்படி மன்னிப்பு கேட்டார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். பாஜக வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது படம் நமது பெரும் சுதந்திரப் போராட்டத்திற்கு செலுத்தும் அவமரியாதை” என விமர்சித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகள் சாவர்க்கர் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்ற வலியுறுத்தியுள்ளன.