புது தில்லி: திரையரங்குகளில் கூடுதல் பாா்வையாளா்களுக்கு தனது புதிய வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில் நீச்சல் குளங்களை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பொது முடக்கத்தில் அவ்வப்போது தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக மேலும் சில தளா்வுகளை அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி திரையரங்குகளில் கூடுதல் பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகளில் 50% பாா்வையாளா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் மட்டும் நீச்சல் குளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைவரும் நீச்சல் குளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
வணிகக் கண்காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து விதமான கண்காட்சிகளையும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த தளா்வுகள் தொடரும்.
மேலும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.