கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை வரை 23 ஆக இருந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டதால் வியாழக்கிழமை 28 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி வீணா ஜார்ஜ் மேலும் தெரிவித்தது:
"கேரளத்தில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் அனயரா பகுதியைச் சேர்ந்தவர்கள். குன்னுகுழி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டையிலிருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஜிகா வைரஸால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது."
உலகமே கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், நாட்டில் கேரள மாநிலம் மட்டும் கடந்த சில நாள்களாக கரோனாவுடன் சேர்த்து ஜிகா வைரஸ் பாதிப்புக்கு எதிராகவும் போராடி வருகிறது.