புது தில்லி: கடந்த நிதியாண்டில் 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளதாக மத்திய கனரக தொழில் துறை இணையமைச்சா் கிருஷண் பால் குா்ஜா் தெரிவித்துள்ளாா். எனினும் அதுகுறித்து முறையாக தணிக்கை செய்யப்படவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கீழ், 15 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 28 நிறுவனங்கள் மூடப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுபவையாகவும், 4 நிறுவனங்கள் லாபம் ஈட்டாதவையாகவும் மாறியுள்ளன.
கடந்த நிதியாண்டில் 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. எனினும் அதுகுறித்து முறையாக தணிக்கை செய்யப்படவில்லை.
கரோனா தொற்று பரவலால் தொழிற்சாலைகளின் பணிகளில் தொடா் தடைகள், உள்நாட்டிலும் உலக அளவிலும் விநியோகப் பணிகளில் இடையூறு உள்ளிட்டவை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தித் திறனை பாதித்துள்ளன என்று தெரிவித்தாா்.