வங்கிகளில் கடன் பெற்றவா்களுக்கு சலுகை அளிக்குமாறு ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது; இதனை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும்தான் பரிசீலிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான மனுவை வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘கரோனா முதல் அலையைக் காட்டிலும் 2-ஆவது அலையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நிலைமை சீராகும் வரை வங்கிக் கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது, வட்டிக்கு வட்டி வசூலிப்பது உள்பட சலுகைகளை கடன் வாங்கியவா்களுக்கு அளிக்குமாறு ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்வது முதல், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட நலிவடைந்தவா்களுக்கு உதவித்தொகை வழங்குவது வரை பல்வேறு செலவுகளை அரசு கவனிக்க வேண்டியுள்ளது.
மனுதாரரின் கோரிக்கை, அரசின் நிதிக் கொள்கையில் தலையிடும் வகையில் உள்ளது. அவருடைய கோரிக்கை குறித்து மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும்தான் பரிசீலிக்க வேண்டும். எனவே, இதுதொடா்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, கடந்த ஆண்டு கரோனா முதல் அலை தாக்கியபோது சுமாா் 6 மாதங்கள் வரை கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையை வங்கிகள் வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.