ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மாா்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோா் எதிா்கொள்ளும் சிரமங்களை உணா்ந்து மத்திய அரசு அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டிஆா்-9 மற்றும் ஜிஎஸ்டிஆா்-9சி படிவங்களை மாா்ச் 31-ஆம் தேதி வரையில் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான இந்த காலக்கெடு நீட்டிப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு கடந்தாண்டு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், 2021 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.